Sunday, August 20, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 8

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!

1. அட நான் சொல்வது உண்மை அதை நம்பினால் நன்மை

2. தாய் என்னும் பூமாலை தரை மேலே வாடுதே

3. செவந்த முகம் கண்டு என் மனசு பதறுது

4. நீ புதிதாய் பிறப்பது எப்பொழுது

5. தப்புக் கணக்கை நாளும் படிச்சேன்

6. வான் நிலவை நீ கேளு கூறும் என் வேதனை

7. காற்றைப் போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்

8. சுகமான உன் மேனி பாடல்

9. கம்பளி போர்த்தும் கருணை ஆனந்தம்

10. நாகரீகம் பார்த்தால் நடக்காது பூஜை

11. சிலையாக நாம் நிற்பதே அற்புதம் ...

12. பலப்பல ஜென்மம் நான் எடுப்பேன், பாடல்கள் கோடி ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 17, 2006

இஸ்ரேல் vs ஹெஸ்பொல்லா

இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே நடந்து வந்த சண்டை ஓய்ந்து, UN தலையீட்டாலும் (US அனுமதித்ததாலும்!) தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து ஒரு பார்வை.

முதலில், இரண்டு ராணுவ வீரர்களை மீட்பதற்காக ஒரு நாடு போர் தொடுப்பது என்பது சற்று அதிகமானது ! மேலும், போரின் முடிவில் இஸ்ரேல் அவர்களை மீட்க முடிந்ததா என்பது தெரியவில்லை ! ஹெஸ்பொல்லாவினால் இஸ்ரேலுக்கு எந்தவித ஆபத்தும் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கூறிக் கொண்டு, இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகள், பல அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பலி கொண்டது அமைதி விரும்பும் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.

இதற்கு முன் இஸ்ரேல் நிகழ்த்திய போர்களூக்கு ஓரளவு நியாயமான காரணங்கள் இருந்தன. இப்போது நிச்சயம் கிடையாது ! எப்போதும் போல அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து அதில் குளிர் காய்ந்தது. எதேச்சாதிகார புஷ், எதிர்பார்த்தது போலவே, "இது அமைதிக்காக நடத்தப்படும் யுத்தம்" என்று இப்போரை வர்ணித்தார் ! இராக்கில் தங்களால் முழுமையாக செய்ய முடியாததை, லெபனானில் இஸ்ரேலாவது செய்யட்டுமே என்ற அமெரிக்க "நல்லெண்ணமும்" இதற்குக் காரணம் !

நமது இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போர் பற்றிய செய்திகளை பொதுவாக புறக்கணித்ததாகவே தோன்றியது. "Breaking News" என்று போட்டு கவைக்குதவாத செய்திகளை மக்களுக்கு வழங்குவதே இவற்றின் தலையாய பணிகளில் ஒன்று ! செய்திகள் குறித்த ஆய்வு (Analysis) எனபது நடைபெறுவதில்லை. நாமும், கொட்டக் கொட்ட அவற்றைப் பார்க்கிறோம் !

ஹெஸ்பொல்லா நிகழ்த்திய ராக்கெட் தாக்குதல்களில், இஸ்ரேலின் வடக்குப்பகுதியான ஹை·பாவில் பொதுமக்கள் பலியாயினர். இஸ்ரேலுக்கும் இழப்பு தான் என்றாலும், இப்போரினால், இப்போது தான் பொருளாதார நிலை சற்றே சீரடைந்து வரும் லெபனானுக்கு, இழப்பு பலப்பல மடங்கு என்றே கூற வேண்டும். லெபனானின் பன்னாட்டு விமான நிலையம், பெட்ரோலிய ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல இடங்கள் குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டன.

தம் மக்களுக்கு ஏற்படக்கூடிய அவல நிலையையும், உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டாவது, ஹெஸ்பொல்லா சற்று முன்னதாகவே பேச்சு வார்த்தைக்கு வந்திருக்க வேண்டும். ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், அதி நவீன தொழில்நுட்பத் தடவாடங்களின் துணையுடன் வரும் இஸ்ரேலை, ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகள் கொண்டு எத்ர்த்துப் போரிட்டதால், லெபனானுக்கும், அதன் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளும், வலியும், மிக மிக அதிகம் ! ஆனால், தீவிரவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது ! மேலும், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவருமே அப்பாவி மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசியல் செய்பவர்கள் தானே !!!

போர் தொடங்குவதற்கு முன், ஹெஸ்பொல்லாவிடம் இருக்கும் ராணுவத் தளவாடங்களை பறிமுதல் செய்யும்படி, லெபனான் நாட்டு ராணுவத்தை இஸ்ரேல் வலியுறுத்தியது உண்மை தான். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத நிலையில் லெபனான் ராணுவம் இருந்தது / இருக்கிறது என்பதும் உண்மையே ! இஸ்ரேலியத் தாகுதல்களால், லெபனானில், ஹெஸ்பொல்லா எதிர்ப்பாளர்கள் கூட பெருமளவு ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் அரசு தற்போது பலமிழந்து, ஹெஸ்பொல்லா இயக்கம் இன்னும் ஆழமாக வேரூன்றுவதற்கு இப்போர் வழி செய்ததுடன், நிரந்தமான நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படக் கூடிய சூழலை பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளி விட்டது ! மிக நிச்சயமாக, இப்போர் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தரவில்லை ! இதனால் ஏற்படவிருக்கும் பாதகங்கள் தான் அதிகம் !

போர் உச்சத்தில் இருந்தபோது, கோண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) இப்பிரச்சினையை, "ஒரு புது மத்திய கிழக்கு பிறக்கும் சமயம் ஏற்படும் பிரசவ வலி" என்று வர்ணித்தார் ! ஆனால், இந்த "புது மத்திய கிழக்கு" (இராக் போலவே!) அமெரிக்க நலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வல்லதாகவே தோன்றுகிறது !

பி.கு: ராக்கெட் மழை பொழிந்த ஹை·பாவுக்கு (Haifa) 2 ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது சாதா மழை தான் பெய்தது ! கடல் மட்டத்திலிருந்து 5000 அடிக்கு மேல் அமைந்த மலைப்பாங்கான, குளிர்ச்சியான, ரம்யமான ஊர் அது. பஹாயி (Bahaii) சமயத்தின் தலைமையிடமாகவும், பஹாயினரால் புனித பூமியாகவும் ஹை·பா கருதப்படுகிறது. அங்கே, என்னுடன் மிகுந்த நட்புடன் பழகிய இஸ்ரேலிய நண்பர்களும் அவர்களின் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, August 15, 2006

சிதம்பரத் தீர்ப்பும் குட்டிக் கதையும்

சிதம்பரம் கோயிலில் திருச்சிற்றம்பலத்தில் ஆறுமுகச்சாமி "தமிழில்" சைவ திருப்பாடல்கள் பாடுவதற்கு எதிராக தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்ததை அடுத்து, இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கியது. இத்தீர்ப்பு குறித்து நண்பர் ஒருவரின் பதிவு அளித்த ஊக்கத்தின் விளைவே இக்குட்டிக்கதைப் பதிவு !

ஒரு மாணவன் தேர்வுக்கு வேண்டி, பசுமாடு பற்றி விளக்கமாக இவ்வாறாகப் படித்தான்,

1. பசுவிற்காக மற்றொரு தமிழ்ச்சொல் 'ஆ'

2. பசு புல், வைக்கோல் போன்றவற்றை உண்டு மனிதர்களுக்கு இன்றியமையாத உணவாகிய பாலைத் தருகிறது.

3. பசு நான்கு கால்களும், இரண்டு கொம்புகளும் உடையது, சாதுவான பிராணியும் கூட !

4. பசுவின் பாலிலிருந்து உருவாகும் நெய், தயிர் போன்றவை சுவையாகவும், ஆரோக்கியம் தருபவையாகவும் உள்ளன.

5. பசுவை இந்துக்கள் தெய்வமாகக் கொண்டாடுகிறார்கள்.

6. அதனால், பொதுவாக, இந்துக்கள் பசு மாட்டிறைச்சியை உண்பதில்லை

7. புதுமனை புகுவிழாவிற்கு பசு கூட்டி வரப்பட்டு அதற்கு பூசை செய்யப்படுகிறது.

இப்படியாக, பசுவைப் பற்றிய (பலர் அறிந்த, அறியாத!) பலப்பல விஷயங்களை நெட்டுரு போட்டு விட்டு, தேர்வுக்குச் சென்ற அம்மாணவனுக்கு பெரிய அதிர்ச்சி ! கேள்வித் தாளில் தென்னை பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது ! சற்றே யோசித்த அந்த 'புத்திசாலி' மாணவன், கிடுகிடுவென்று பசுவைப் பற்றி தான் படித்து வைத்திருந்ததை ஒன்று விடாமல் எழுதி விட்டு, முத்தாய்ப்பாக, "அத்தகைய சிறப்புகளை பெற்ற பசுவானது, அழகான தென்னை மரத்தில் கட்டப்பட்டிருந்தது!" என்று கட்டுரையை நிறைவு செய்தான் !

ஆக, பசுவைப் பற்றி தனக்குத் தெரிந்ததை எழுதிய மாதிரியும் ஆயிற்று, தென்னையைப் பற்றிய கட்டுரை எழுதிய திருப்தியும் ஏற்பட்டது அம்மாணவனுக்கு !!! மாணவனின் சமயோஜிதத்தையும், கெட்டிக்காரத்தனத்தையும் வியந்து பாராட்டி, ஆசிரியர் அக்கட்டுரைக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கினார் ! இன்ன பிறரும் அவனைப் பாராட்டினார்கள் !

பி.கு: குட்டிக்கதையை எழுதி முடித்து விட்டு ஏதோ ஒன்று எழுத நினைத்தது மறந்து விட்டதே என்று நினைத்தேன் ! யோசித்தேன், அது இது தான் .... அம்மாணவனின் பெயர் 'அம்பேத்கார்' !!!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, August 13, 2006

இடஒதுக்கீடு அமுல் - வீரப்ப மொய்லி

27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் அரசியல் கட்சிகளிடையே கருத்து வேறுபாடும், பொதுவாக குழப்பமும் நிலவும் நிலையில், CNN-IBN தொலைக்காட்சியில் கரண் தபாருடனான ஒரு நேர்முகப் பேட்டியில், மேற்பார்வைக் குழுவின் (Oversight Committee) தலைவர் ஆன வீரப்ப மொய்லி, பின் வருமாறு கூறியுள்ளார்.

1. இவ்விஷயத்தில் உயர்கல்வி நிறுவனங்களை மிரட்டிப் பணிய வைக்கும் (Bulldozing) பேச்சுக்கே இடமில்லை !

2. நிறுவன வாரியாக நான் பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை எவ்வாறு செயல்படுத்துவது (அதாவது, ஒரு கட்டத்திலா, பல கட்டங்களிலா) என்ற முடிவு எடுக்கப்படும்.

3. கல்வி நிறுவனங்கள் மேற்பார்வைக் குழுவின் ஆலோசனைகளை பரிசீலித்து, அவைகளின் தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது குறித்து, கல்வி நிறுவனங்களே ஒரு நல்ல முடிவெடுக்க வாய்ப்பு தரப்படும் என்ற சாத்தியம் உள்ளது.

4. இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவது பற்றி ஆராய்ந்த ஐந்து துணைக் குழுக்களுமே (Sub-groups) இடஒதுக்கீட்டை ஒரே கட்டத்தில் (one phase) நடைமுறைக்கு கொண்டு வருவது இயலாத காரியம் என்று கூறியிருக்கின்றன.

5. உயர்கல்வி நிறுவனங்களுடனும், கல்வி வல்லுனர்களுடனும் விரிவாக பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் எண்ணங்களை கேட்டறிந்த பின்னர், எனது தலைமையிலான மேற்பார்வைக் குழு இறுதி முடிவெடுக்கும்.

6. ஆகஸ்டு 31-ஆம் தேதி, மேற்பார்வைக் குழு தனது அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்கும்.

7. உயர்கல்வி நிறுவனங்களின் தரம் (Excellence) பாதிக்காத வகையில், இடஒதுக்கீட்டை செயல்படுத்துவது தான், முக்கியக் குறிக்கோளாகக் (Main Theme) கொள்ளப் பட்டுள்ளது !

திரு.வீரப்ப மொய்லி கூறுவதை வைத்துப் பார்க்கும்போது, "எடுத்தோம், கவுத்தோம்!" என்றில்லாமல், பிற்படுத்தப்பட்டவரில் உண்மையான தேவையிருப்போர் முழுப்பலன் பெறும் வகையில், ஓட்டுக்களுக்காக என்றில்லாமல், யதார்த்தத்தை கருத்தில் கொண்டு, விருப்பு வெறுப்பின்றி, நேர்மையான முறையில் இடஒதுக்கீடு செயல்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. பார்க்கலாம் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Thursday, August 10, 2006

பெரியார் பட சர்ச்சை - II

*********************
பெரியார் திரைப்பட சர்ச்சை - I
********************

தற்போது, மற்றொரு சர்ச்சை கிளம்பியிருக்கிறது. முதலில், எஸ்.வி.சேகர், பெரியார் திரைப்படத்திற்கு அரசு மானியம் வழங்கியது போல, மூதறிஞர் ராஜாஜி பற்றி படம் எடுக்க முன் வந்தால், அரசு மானியம் கிடைக்குமா என்று கேட்டதும், அதைத் தொடர்ந்து, பெரியார் படம் எடுப்பதை சேகர் எதிர்ப்பதாக ஊடகங்களில் செய்தி பரப்பப்பட்டது. அவர் கூறியது, பெரியார் படத்தை அரசே தயாரித்தால், செலவு குறைவாக இருக்கும் என்பது தான். இப்போது டிராபிக் ராமசாமி என்பவர், அரசு ஒரு தனி நபருக்கு (ஞானசேகரன்) 95 லட்சம் வழங்கியதை எதிர்த்து பொதுநல வழக்கொன்றை தொடுத்துள்ளார். பெரியார் பக்தகோடிகள் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே தாக்கியதாக நேற்று செய்தி வந்தது.

அரசு இந்த சர்ச்சையை தவிர்த்திருக்கலாம் ! அதாவது, பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறிக் கொள்ளும் திராவிடக் கட்சிகள் (திமுக, அதிமுக, தி.க, பா.ம.க ...), கட்சி சார்பாக பெரியார் படம் எடுக்க பண உதவி செய்திருக்கலாம் ! திமுகவும், அதிமுகவும் பணபலம் உள்ள கட்சிகள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே ! திமுக, சட்டமன்றத்திலேயே, தாங்கள் பெரியார் படத்திற்கு கட்சி சார்பில் பணவுதவி செய்யப் போவதாக அறிவித்திருந்தால், மற்ற
திராவிட வழி வந்த கட்சிகளும் (அதிமுக உட்பட) பெரியார் படமெடுக்க ஏதாவது உதவி செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கும் என்பது என் கருத்து. கட்சித் தலைவர்களையும், அவர்களின் எண்ணப்போக்கையும் மக்கள் புரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கும் அல்லவா ?

மேலும், பெரியார் கொள்கைகளை தங்கள் உயிர் மூச்சாகக் கொண்டிருக்கும் திராவிட கழகம், இப்படத்திற்கு பெரிய அளவில் நிதியுதவி செய்யும் நிலையில் தான் உள்ளது என்பது உண்மை தானே ! கழகக் கண்மணிகள் நிதி வசூலும் செய்யலாமே !

இது ஒரு புறமிருக்க, தமிழ்த் திரைப்படப் பெயர்கள் தமிழில்(!) இருந்தால், அப்படங்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும் என்று அரசு அறிவித்திருப்பது, நல்லதொரு கேலிக்கூத்து ! பொதுவாக அரசு வழங்கும் மானியம் மற்றும் சலுகைகளுக்கான முழுப்பலன் திரைப்படத்துறையில் இருக்கும் கடை நிலை தொழிலாளர்களை சென்றடைவதில்லை. கோடிகளில் புரளும் தயாரிப்பாளர்களும், நடிகர்களும் மேலும் இதனால் லாபம் அடைகிறார்கள் ! சலுகைகள் என்பவை நல்ல திரைப்படங்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும். இஷ்டத்திற்கு சலுகைகள் அளித்து அரசு தன் நியாயமான வருமானத்தை இழப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

அடுத்து, பெரியார் திரைப்படத்தில் வள்ளியம்மையாக நடிக்க ஜோதிர்மயி என்ற புதுமுக நடிகை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ரேவதி, கௌதமி போன்ற தேர்ந்த நடிகைகளை (மற்றும் நடிகர்களை) நடிக்க வைத்தால், படத்தின் வெற்றி வாய்ப்பு இன்னும் பிரகாசமாக அமையும் என்று நினைக்கிறேன். சத்யராஜ் மட்டுமே படத்திற்கு வெற்றி தேடித் தர இயலாது !

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 15, 2006

சூடு தணிச்சு யோசிங்க, சிரிங்க !

முகமூடியின் இந்தப் பதிவை வாசித்து, Calgary சிவாவின் வேண்டுகோளுக்கு செவி மடுத்ததின் விளைவாக, விளைந்தது இந்த தமிழாக்கப் பதிவு ! ஆங்கில மூலத்திற்கு முகமூடியின் பதிவைப் பார்க்கவும் ! இப்படி லிங்க் தருவதன் மூலம் முகமூடிக்கும் நிறைய வாசகர்கள் கிடைப்பார்கள் இல்லையா ;-)


1. மெளனத்தை மேம்படுத்த வழியின்றிப் பேசாதே !

2. தவளைகள் தங்களை "BUG" செய்பவற்றை, எளிமையாகத் தின்று விடுகின்றன !

3. முட்டாள்தனம் ஒரு குறையல்ல ! வேறெங்காவது செல் !

4. சில நேரங்களில் நீ பூச்சி, சில நேரங்களில் நீ காற்றுத் தடுப்பான் (Windshield) !!!

5. உனக்கு உதவி செய்ய விருப்பம். எப்படி நீ உள்ளே நுழைந்தாய் ???

6. உன்னிடம் ஒன்று இருப்பதினாலேயே, அந்த ஒன்று இருப்பது போல் நீ நடந்து கொள்ளத் தேவையில்லை !

7. நான் "எவரும் இல்லை", அப்பழுக்கற்றவர் "எவரும் இல்லை", எனவே நான் அப்பழுக்கற்றவன் ! என்ன ஏதாவது புரியுதா :)

8. பாக்டீரியாவுக்கு ஆதரவு அளியுங்கள், சில மனிதர்கள் அதன் "Culture" க்கு மட்டுமே தகுதியானவர்கள் !

9. "எண்ணம்" என்று வரும்போது, சிலர் எங்கேயும், எதிலும் நிறுத்துவதில்லை !

10. அறிவுஜீவி: நீங்கள் மதிப்பு தராத பலப் பல விஷயங்கள் குறித்து அறிந்து வைத்திருப்பவர்

11. "இல்லை" என்பதன் எந்தப் பகுதி உனக்கு விளங்கவில்லை ?

12. பன்றியுடன் மல்லுக் கட்டாதே ! நீங்கள் இருவருமே அசுத்தப்படுவீர்கள், ஆனால் பன்றிக்கு அதில் கொண்டாட்டமே :)

13. ஓரணியாக செயல்படுவது மிக அவசியம் -- இன்னொருவர் மேல் பழி போட அது அனுமதிப்பதால் !

14. சரியாக இலக்கை நோக்கிச் சுட வேண்டுமெனில், முதலில் சுடு, பின்னர் சுட்ட இடத்தை இலக்கு என்று கூறு !

15. நான் ஒரு நாளைக்கு ஒருவரை மட்டுமே மகிழ்விப்பேன். ஆனால், இன்று உன் நாளில்லை, நாளையும் தோதாகத் தோன்றவில்லை !!!

16. எலிப் பந்தயத்தில் (Rat-Race) பிரச்சினை என்னவென்றால், அதில் நீ வென்றாலும், நீ எலியாகவே கருதப்படுவாய் !

நன்றி: நண்பர் முகமூடி அவர்கள் !

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 14, 2006

படிச்சுட்டு முடிஞ்சா சிரிங்க --- 8-வது பதிவு

1. வாழ்க்கை எனும் ஓடம், வழங்குகின்ற பாடம் !

நடு இரவில் கண் விழித்த ஒரு பெண்மணி தன் கணவர் அருகில் இல்லாதது கண்டு அவரை வீட்டில் தேடியபோது, கணவர் சமையலறையில் காபி அருந்திக் கொண்டிருப்பதை பார்த்தார். கணவர் சுவற்றை வெறித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் இருப்பது போல் தோன்றினார். அவர் கண்ணிலிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார். துணுக்குற்ற மனைவி, "என்ன ஆச்சு, டார்லிங் ? இந்நேரத்தில் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் ?" என்று வினவினார். கணவர், மனைவியை நிமிர்ந்து பார்த்து, "20 வருடங்களுக்கு முன் நாமிருவரும் காதல் வயப்பட்டது உனக்கு ஞாபகம் இருக்கிறதா ? அப்போது உனக்கு 16 வயது தான் !". மனைவி, "நன்றாக நினைவிருக்கிறது" என்றார்.

இருவருக்குமிடையே சிறிய மௌனம் நிலவியது ! கணவரின் குரலில் ஏற்பட்ட தடுமாற்றத்தால், வார்த்தைகள் மெல்ல மெல்ல வெளிவந்தன, "உன்னுடைய அப்பாவிடம் நாம் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் (மனைவியின் முகத்தில் இப்போது வெட்கம்!) மாட்டிக் கொண்டதும், முன்கோபியான அவர், நான் உடனே உன்னை திருமணம் செய்யாவிடில் என்னை 20 வருடங்கள் சிறையில் அடைக்க சட்டத்தில் வழி இருக்கிறது என்று துப்பாக்கி காட்டி மிரட்டியதும் உனக்கு நினைவிருக்கிறதா ?" என்று கேட்டதும், மனைவி மிக மென்மையாக, "ஆமாம், செல்லம், ஞாபகம் வருகிறது" என்று பதிலுரைத்தார். கணவர் கண்களை துடைத்துக் கொண்டே, "இன்று நான் விடுதலை அடைந்திருப்பேன் !!!" என்று மிக்க கழிவிரக்கத்துடன் கூறினார் :)

2. வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் !

ஒரு கணவர் அலுவலகத்திலிருந்து தனது மனைவியை தொலைபேசியில் அழைத்து, "டார்லிங், நான் எனது மேலாளருடனும், அவருடைய நண்பர்களுடனும், கனடாவிற்கு ஒரு வார காலம் மீன் பிடி சுற்றுலா செல்ல வேண்டியுள்ளது ! நான் எதிர்பார்க்கும் பணி உயர்வைப் பெற இது ஒரு நல்ல வாய்ப்பாக நிச்சயம் அமையும் ! பயணத்துக்குத் தேவையான துணிமணிகளையும், மீன்பிடி உபகரணப் பெட்டியையும் தயாராக எடுத்து வை. அலுவலகத்திலிருந்தே கிளம்ப வேண்டியிருப்பதால், செல்லும் வழியில், அவற்றை எடுத்துக் கொள்கிறேன். ஓ, ஒன்றை மறந்து விட்டேன். எனது நீல நிற பைஜாமாவை மறக்காமல் எடுத்து வை" என்று கூறினார்.

மனைவியும் பரபரப்பாக செயல்பட்டு, கணவரின் பயணத்திற்குத் தேவையான அனைத்தையும் பேக் செய்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தார். ஒரு வாரம் கழித்து திரும்பிய கணவர், சற்று அயற்சியாகத் தெரிந்தாலும், உற்சாகமாகவே காணப்பட்டார். "என்ன, நிறைய மீன் பிடித்தீர்களா ?" என்று கேட்ட மனைவியிடம், கணவர், "ஆமாம், நிறையவே, வால மீன், விலாங்கு மீன், வஜ்ரம், விரால் -னுட்டு நிறையவே ! ஆனால், ஏன் நீ நான் கேட்ட நீல நிற பைஜாமாவை எடுத்து வைக்கல ? மறந்துட்டியா ?" என்றார். உடனே மனைவி, "இல்லையே, எடுத்து வைத்தேனே, உங்களுடைய மீன்பிடி உபகரணப் பெட்டியில் வைத்திருந்தேன் !!!" என்றவுடன், கணவர் எஸ்கேப் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Tuesday, July 11, 2006

மும்பையில் மறுபடியும் ஒரு பயங்கரம் !

இன்று மாலை 6 - 6.30 PM, அதாவது 30 நிமிட நேரத்தில் மும்பையில் 7 குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. இந்த தொடர் குண்டு வெடிப்பு மும்பையின் மேற்கு ரயில் (western railway) பாதையில் அமைந்துள்ள சந்திப்புகளில் நடந்துள்ளது. மாதுங்கா, மாஹிம், சாந்தாகுரூஸ், கார், ஜோகேஷ்வரி, பயந்தர், போரிவிலி ஆகிய இடங்களில் நடந்த இந்த கோர சம்பவத்தில் 40-50 பேர் உயிரிழந்துள்ளனர். எண்ணிக்கை அதிகரிக்கலாம் ! பலர் காயமடைந்துள்ளனர். NDTV-இல் பார்த்த சில காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

தில்லியிலிருந்து கிடைத்ததாகக் கூறப்படும் இன்டெலிஜன்ஸ் தகவல்கள், Lashkar-e-Toiba தீவிரவாதிகளே (தாவூதின் துணையோடு) இந்த படு பாதகச் செயலை நிறைவேற்றியதாக தெரிவிக்கின்றன. இந்த கொலைகாரர்கள் கிட்டத்தட்ட 8 மாதங்கள் மும்பையிலேயே தங்கி, திட்டமிட்டு இதைச் செய்ததாகக் கூறப்படுகிறது. தீவிரவாதிகள் இதற்குத் தேவையான, பெரிய அளவிலான வெடி மருந்து பொருட்களை எவ்வாறு கடத்தி மும்பைக்கு எடுத்து வந்தார்கள் என்பது ஒரு பெரிய கேள்வி ! இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்பதைத் தவிர தற்போது வேறென்ன நாம் செய்ய இயலும் ? இந்த பயங்கரத்தைச் செய்த தீவிரவாத ஈனப்பிறவிகளை (இவர்களை மிருகங்களுடன் ஒப்பிடுவது, அவற்றுக்கு கேவலம்!) என்ன செய்தால் தகும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, July 09, 2006

திரு.வேணுகோபாலை ஏன் பிடிக்கும் ?

இதற்கு பல காரணங்கள் உள்ளன.

1. திரு.வேணுகோபால், உதவி என்று தன்னை நாடி வந்தவர்களுக்கு அயராமல் முடிந்தவரை வேண்டியதை செய்து, அவர்களின் குறைகளை போக்கியிருக்கிறார். இனிமேலும், அவ்வாறே செய்வார் என்பது என் நம்பிக்கை .

2. திரு.வேணுகோபால் ஒரு நல்ல இசைக்கலைஞர் என்பது பலருக்கு தெரியாது. தன் இசையால் பலரையும் தன் வயப்படுத்துபவர் என்று அவர் நண்பர்கள் கூறுகிறார்கள்.

3. தன்னை நம்பி வந்த ஒரு பெண்மணிக்கு, ஒரு முறை மிகப்பெரிய உதவியை செய்தவர் திரு.வேணுகோபால். அத்தகைய உதவியை நானறிந்து யாரும் செய்ததில்லை !

4. அவருடைய சாதுர்யமும் (கொஞ்சம் சாணக்கியத்தனமும்) அவரைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு பெரும்போராட்டத்தில் குறிப்பிடத்தக்க வெற்றிகளை தந்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.

5. தன் சிறு வயதில், சிறந்த அறிவுள்ளவராகவும், தைரியசாலியாகவும் திகழ்ந்தார். ஆனால், அவரது அன்னை, வேணுகோபால் சின்னச் சின்ன திருட்டுக்கள் செய்திருப்பதாகக் கூறுகிறார். சிறுவயதில் குறும்புகள் சகஜம் தானே !

6. தன்னை நாடி வந்த புத்திசாலி மாணவன் ஒருவன், திரு.வேணுகோபாலின் செறிவு மிக்க வார்த்தைகளை கேட்டு, வாழ்வில் வெற்றியடைந்து, சிகரத்தைத் தொட்டதை மறக்க முடியுமா என்ன ?

7. திரு.வேணுகோபால் நட்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர். தனது நண்பர் ஒருவருக்கு அவர் கேட்காமலேயே வேண்டிய உதவியை செய்து, நண்பரின் மனம் குளிர வைத்தவர்.

8. ஏன், பல அயல் நாட்டவர் கூட அவர் பால் ஈர்க்கப்பட்டு, திரு.வேணுகோபாலை தங்கள் தலைவராகவே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இத்தகைய நல்ல உள்ளமும் குணங்களும் கொண்ட திரு.வேணுகோபாலை, நானும் இன்னும் பலரும் விரும்புவதில் என்ன பெரிய ஆச்சரியம் இருக்க முடியும் ?? அவரிடம் பிடிக்காத ஒன்று என்று கூற வேண்டுமானால், சிறு வயதில் அவர் இளம்பெண்களை சற்று அதிகமாக நையாண்டி செய்திருப்பதை சுட்டிக் காட்டலாம் ! மற்றபடி, திரு.வேணுகோபால் ஓர் அசாதாரண பெர்சனாலிடி என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
*******************************





விஷ்ணுவின் அம்சமான, குழலூதும் கண்ணபிரானாகிய பகவான் வேணுகோபாலனை வெறுப்பவர் யாருமிலர் :)

பின் குறிப்பு: பதிவை மறுபடியும் வாசிக்கவும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள 8 பாயிண்ட்களின் விவரம் கீழே:

1. வேணுகோபால சுவாமி உலக ரக்ஷகர் !

2. புல்லாங்குழல் வாசிப்பவர் !

3. திரௌபதிக்கு அபயமளித்தவர் !

4. குருஷேத்திர யுத்த வெற்றிகளுக்கு உதவியவர் !

5. காளிங்கனை அடக்கியவர், வெண்ணெய் திருடியவர் !

6. பார்த்தனுக்கு கீதோபதேசம் செய்தவர் !

7. ஏழை சுதாமாவுக்கு உதவியவர் !

8. ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க நாயகர் !

என்ன, நான் சொன்னதெல்லாம் சரி தானே, அடிக்க வர மாட்டீர்கள் என்ற சின்ன நம்பிக்கையில் தான், இப்படி ... ;-)

ஆக்கத்திற்கு ஊக்கம் : நண்பர் 'தமிழினி' முத்து அவர்கள் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Friday, July 07, 2006

வேணுகோபால் என்ற மருத்துவர்

தன்னை பணியிலிருந்து நீக்கியதும், அதை சிறுமைப்படுத்தும் விதத்தில் செய்ததும் தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக (It is a lasting feeling of pain that hurts terribly!) Dr.வேணுகோபால் கூறியுள்ளார். அவர் பக்கத்து விளக்கத்தை எடுத்துக் கூற அவருக்கு வாய்ப்பளிக்காமல், அவரை பணி நீக்கம் செய்தது சரியான அணுகுமுறை இல்லை. அவரை நீக்குவது பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டபோது, அவரை அறைக்கு வெளியே காத்திருக்க வைத்தது அதை விடக் கொடுமை ! அமைச்சர், வேணுகோபாலுடன் AIIMS-இல் நிலவும் பிரச்சினைகள் குறித்து விரிவாகப் பேசி, ஒரு சுமுகமான தீர்வுக்கு வழி வகுத்திருக்கலாம் தான் ! ஆனால், நம்மூர் அரசியல்வாதிகள் கிட்டத்தட்ட குறுநில மன்னர்கள் போல் தானே செயல்படுகிறார்கள் :-( அமைச்சர் தான் AIIMS-இன் தலைவர் என்பது உண்மை தான். ஆனால், அதை குடியரசுத் தலைவர் பதவி போல Advisory பதிவியாகத் தான் பார்க்க வேண்டும். முக்கியமாக, AIIMS போன்ற Autonomous கழகங்களில் அரசியல் தலையீடு இல்லாமல் இருப்பது மிக அவசியமாகிறது. இத்தனை ஆண்டுகள் அவ்வாறு இருந்தது தான், AIIMS-இன் வளர்ச்சிக்கும் அதன் உலகளாவிய மதிப்புக்கும் காரணம் !

இப்போது Dr.வேணுகோபாலைப் பற்றி:

Dr.வேணுகோபால் உலகப் பிரசித்தி பெற்ற ஒர் இதய அறுவை சிகிச்சை நிபுணர். AIIMS-இல் 40 ஆண்டுகள் அவர் பணி புரிந்து பல நல்ல திட்டங்களை வகுத்து அவற்றில் வெற்றியும் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தம் தான் அவர் பணி வாழ்வில் ஒரு கரும்புள்ளி என்று கூறலாம். இதுவே சில அரசியல்வாதிகளை (முக்கியமாக அமைச்சரை) அவருக்கு எதிராக திருப்பி, அவர் மேல் காழ்ப்புணர்ச்சி ஏற்பட காரணமாய் அமைந்து விட்டது. அரசியல் சூழ்ச்சி விளையாட்டு குறித்து அவரின் அறியாமையே அவரை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டது ! கொஞ்சம் அரசியல் அறிவு / சூட்சமம் தெரிந்தவராக இருந்திருந்தால், அமைச்சருடன் சமரசம் செய்து கொண்டு போயிருப்பார் அல்லவா ? அவருக்கு ஆதரவாக வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ள மருத்துவர்களின் மேல் "ESMA" பாயலாம் என்று யாரோ அவரிடம் கூறியபோது, திரு.வேணுகோபால் "ESMA"வை ஆஸ்த்மா என்று புரிந்து கொண்டார் என்றால் பாருங்களேன் !

1996-இல் AIIMS டைரக்டராக அவரை நியமனம் செய்தபோது, அப்பதவியை முதலில் அவர் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ! தனது 18 வயதிலிருந்து, 46 வருடங்கள் AIIMS-இல் தொடர்ந்து சேவை செய்த ஒரு புகழ் பெற்ற மருத்துவரை நேற்று முளைத்த காளான்கள் மோசமான முறையில் தூக்கி எறிந்திருப்பது வருந்தத்தக்கதே. படித்த காலத்தில், பிரதமர் நேருவிடமிருந்து, சிறந்த மாணவருக்கான தங்கப் பதக்கம் வாங்கியவர் திரு.வேணுகோபால். மருத்துவப் பட்ட மேற்படிப்பிலும் தங்கப் பதக்கம் வாங்கியவர். பெருமை வாய்ந்த இதய அறுவை சிகிச்சை நிபுணர் டென்டன் கூலியிடம் (Denton Cooley) பயிற்சி பெற்றவர். அதைத் தொடர்ந்து, 1974-இல் AIIMS-இல் இதய அறுவை சிகிச்சைத் (open heart surgery) துறையை நிறுவி, நூற்றுக்கணக்கான மருத்துவர்களை பயிற்றுவித்திருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 62000 இதய அறுவை சிகிச்சைகள் செய்துள்ளவர் திரு. வேணுகோபால் ! இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்தவர் என்ற பெருமைக்கும் உரியவர் திரு.வேணுகோபால் ! 1998-இல் அவரது அயராத மருத்துவ சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்றவர் திரு.வேணுகோபால்.

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, July 05, 2006

அப்பாடா, ஜெர்மனி தோற்றது !

நான் மிக மிக எதிர்பார்த்தது போலவே நேற்று இரவு நடைபெற்ற கால் பந்தாட்டத்தில் ஜெர்மனி இத்தாலியிடம் தோற்றுப் போனது ! அதே போல, தொடக்கத்திலிருந்தே முக்கி முக்கி ஆடிய பிரேசில் பிரான்ஸிடம் தோற்றதும் ஓரளவு எதிர்பார்த்தது தான் ! கால் இறுதியில் நடந்த மாதிரி, ஆட்டத்தை எப்பாடு பட்டாவது Penalty shoot out-க்கு இட்டுச் சென்று, அர்ஜெண்டினாவை வீழ்த்தியது போல இத்தாலியையும் வீழ்த்தி விடலாம் என்ற ஜெர்மானிய எண்ணத்தில் மண் !

மிகச்சிறப்பாக ஆடிய இத்தாலி அணி, எக்ஸ்ட்ரா வேளியின் கடைசி மூன்று நிமிடங்களில் இரண்டு அருமையான கோல்கள் போட்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. பிரான்ஸ¤ம் இன்று போர்ச்சுகலை வென்று, இத்தாலியுடன் இறுதி ஆட்டத்தில் மோதினால், ஒரு மின்சாரப் பாய்ச்சி (ELECTRIFYING ;-)) ஆட்டத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம். இத்தாலியோ, பிரான்ஸோ யார் கோப்பையை வென்றாலும் மகிழ்ச்சியே !!!

ஜெர்மனி ஓரளவு திறமையாக ஆடினாலும், அவ்வணியின் ஆட்டம் பார்ப்பதற்கு ரசிக்கத் தக்கதாக இருப்பதில்லை. ஒரு "Set Pattern" வகை ஆட்டத்தையே தொடர்ந்து விளையாடியும், துளியும் கற்பனை இல்லா (Unimaginative) ஆட்ட யுக்தியை கடைபிடித்தும் வந்ததே, ஜெர்மன் தோல்விக்கு ஒரு முக்கியக் காரணம் என்பது என் கருத்து.உலக கால்பந்து போட்டிகளில் இத்தாலி ஜெர்மனியிடம் ஒரு முறை கூட தோற்றது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று ஜெர்மனி ஓரளவு (மற்ற ஆட்டங்களை விடவும்) நன்றாகவே விளையாடியது. பெர்ட் ஸ்னைடர் இரு முறை, கோல் போடும் எளிமையான வாய்ப்புகளை நழுவ விட்டார் ! எக்ஸ்ட்ரா வேளியின் 27-வது நிமிடத்தில் கென்னாரோ கடூஸோ பிரமிக்கத்தக்க வகையில், கடினமான ஒரு கோணத்திலிருந்து, பந்தை இடது காலால் உதைக்க, சுழன்று சென்ற பந்து கோல் கம்பத்துக்கு வெளியே செல்வது போல் ஒரு பாவ்லா காட்டி விட்டு, கோல் போஸ்ட்டுக்கு உள்ளே இடது புற மேல் மூலையில் தஞ்சமடைந்ததும், ஜெர்மானியப் பார்வையாளர்களிடையே பேச்சு மூச்சில்லா ஒரு மயான அமைதி குடி புகுந்தது (ரொம்பப் பெரிய வாக்கியமோ :))

இத்தாலியர்களோ களிப்பின் உச்சத்தில் மிதந்தனர் ! ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில், ஒரு திறமையான PASS வாயிலாக வந்த பந்தை, டெல் பியரோ கோலடித்து "Execution of Germany"யை துல்லியமாக நிறைவு செய்தார் !!!

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, July 01, 2006

டோண்டு, ஜீவாவின் 'ஆறுக்கான' அழைப்பு !

தலைப்பில் குறிப்பிட்டுள்ள வலைப்பதிவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, இப்பதிவு ! கொஞ்சம் வித்தியாசமாக ஒன்றிலிருந்து ஒன்பது வரை, பிடித்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன் !

ஒன்று:
மருத்துவ மாணவி கௌசல்யாவுக்கு (வலைப்பதிவு நண்பர்களின் ஆதரவோடு) உதவி செய்ய முடிந்ததையே, வலைப்பதிவு ஆரம்பித்து, தமிழ்மணத்தில் என்னை இணைத்துக் கொண்டு எழுதியதன் விளைவாக ஏற்பட்ட மிகப் பெரிய பயனாக / மன நிறைவாகக் கருதுகிறேன்.

இரண்டு:
வலை பதிய முதல் ஊக்கம் தந்த இருவர் தேசிகன் மற்றும் காசி
(நண்பர்கள் சிங்கை அன்பு, சந்திரவதனா, யளனகபக கண்ணன் ஆகியோரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

மூன்று:
என்னை வலை நண்பர்களிடையே சற்று பிரபலம் ஆக்கிய விஷயங்களாக நினைப்பது
1. பல்லவியும் சரணமும் பதிவுகள் (மொத்தம் 32 !)
2. சிறுவயது சிந்தனைகள் பதிவுகள் (மொத்தம் 8)
3. GCT கல்லூரி வாழ்க்கை பற்றிய பதிவுகள் (மொத்தம் 5)


(உஷாவின் உத்தரவுப்படி (மன்னிக்கவும்! வேண்டுகோளுக்கு இணங்க ) வாசகர் விருப்பமாக புதியவர்கள் படிப்பதற்காக, மன்னனின் கௌரவம் சதுரங்க நடுவிலே! சேர்க்கப்பட்டுள்ளது !

நான்கு:
படித்ததில் பிடித்தவை
1. சுஜாதாவின் எழுத்துக்கள்
2. கலீல் கிப்ரான் கவிதைகள்
3. ஜெ·ப்ரி ஆர்ச்சர் - எல்லா நாவல்களும்
4. பக்தி ரஸம் சொட்டும் ஆழ்வார் பாசுரங்கள்


ஐந்து:
"Controversy" பதிவர்கள் - THY Names are
1. முகமூடி
2. குழலி
3. டோண்டு ராகவன்
4. தமிழினி முத்து
5. மாயவரத்தான்

(இருந்தாலும் இவர்களின் பதிவுகள் ரசிக்கத் தக்கவை !)

ஆறு:
பல முறை அனுபவித்துப் பார்த்த தமிழ் திரைப்படங்கள்
1. காதலிக்க நேரமில்லை'
2. ஊட்டி வரை உறவு
3. தில்லுமுல்லு
4. அந்த ஏழு நாட்கள்
5. முள்ளும் மலரும்
6. அன்பே சிவம்

ஏழு:
பிடித்த வலைப்பதிவர்கள் (Not in any particular order :) )
1. தேசிகன்
2. ஐகாரஸ் பிரகாஷ்
3. ரஜினி ராம்கி
4. பெனாத்தல்கள் சுரேஷ்
5. ரோசா வசந்த்
6. யளனகபக கண்ணன்
7. மாண்ட்ரீசர் (முழுசா எதுவும் புரியாவிட்டாலும் கூட ;) )

(அருண் வைத்தியநாதனையும், PK சிவகுமாரையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன் !)

எட்டு:
பிடித்த எட்டு தமிழ்ப் பாடல்கள்
1. குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
2. மாலைப்பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழி
3. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை
4. மலரே குறிஞ்சி மலரே
5. பூஜைக்கு வந்த மலரே வா, பூமிக்கு வந்த நிலவே வா
6. தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ மனசிலே
7. காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே
8. காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா


ஒன்பது:
பார்க்க விரும்பும் இடங்கள்
1. ஹவாயி தீவுகள்
2. வெஸ்ட் இண்டீஸ் (2007 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு போகலாம்னு மனசுலே ஒரு எண்ணம் இருக்கு, பார்க்கலாம்!)
3. நயாகரா (இது நீருக்கு வீழ்ச்சியல்லவே, எழுச்சி அல்லவா என்ற வைரமுத்துவின் வரிகள் நினைவுக்கு வருகிறது !)
4. மொரீஷியஸ்
5. நியுசிலாந்து
6. மசை மாரா (ஆப்பிரிகா)
7. குலு மணாலி
8. டார்ஜிலிங்க்
9. வைணவ திவ்ய தேசங்கள் (106-இல் எவ்வளவு இயலுமோ !)


என்றென்றும் அன்புடன்
பாலா

பல்லவியும் சரணமும் II - பதிவு 7

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. ஒரு தடவை தேன் கொடுத்து மடியில் விழுந்தேனா ...

2 அது காலங்கள் மாறினும் மாறாதது....

3. கதிர் போலே நான் கண்டேன் மன்னன் முகம் ...

4. சிட்டுக்கள் போல தொட்டுக் கொண்டாட நேரம் வரவில்லை ...

5. தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை ...

6. மடியேறி வாழும் பெண்மை படியேறி வந்ததின்று ...

7. அன்று சொன்ன வார்த்தை அலை போல ...

8. அவள் நிலை நீ உணர மாட்டாயோ...

9. தொட்ட கைகளால் நான் மலர்ந்தேன் ...

10. சின்னாளம்பட்டியிலே கண்டாங்கி எடுத்து ...

11. கண்ணீரிலே நான் தீட்டினேன் கன்னத்தின் கோலங்கள்...

12. மடி மீது விளையாடும் சேயாக ...

என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!

என்றென்றும் அன்புடன்
பாலா

Wednesday, June 28, 2006

GCT யில் ஒரு VIP யுடன் சந்திப்பு !

சென்ற வாரம் GCT கல்லூரிக்கு, நான் பணி புரியும் நிறுவனத்திற்கு இளம் பொறியாளர்களை தேர்ந்தெடுக்கும் நிமித்தம் (Campus Recruitment) செல்ல நேர்ந்தது. எப்போதும் போலவே கல்லூரி வளாகத்திற்குள் காலடி எடுத்து வைப்பதே ஒரு சுகானுபவமாகத் தோன்றியது! சந்தித்த மாணவப் பிரதிநிதிகள், மிக அடக்கமாகவும், எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வுகளை நடத்த மிக உதவியாகவும் இருந்தார்கள். Girls College of Technology என்று சொல்லும் அளவுக்கு மாணவிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தது !! நான் பயின்ற காலகட்டத்தில், பொறியியற் படிப்பில் தகவல் தொழில்நுட்பம், கணினிவியல் போன்ற கிளைகள் இல்லை. நான் பழைய மாணவன் என்றவுடன் கல்லூரியின் Placement coordinator (முனைவர் தண்டபாணி) நான் கல்லூரி முதல்வரை (முனைவர் திரு. பழனிச்சாமி) சந்திக்க ஏற்பாடு செய்து விட்டார்.

அதற்கு முன்பே, நான் சந்திக்க விரும்பிய VIP க்கு போன் செய்து, என்னை சந்திப்பதற்கு GCT வர இயலுமா என்று கேட்டதற்கு, 'இதோ புறப்பட்டு வருகிறேன், எங்கு காத்திருக்கிறீர்கள் ?' என்றார் !!! சொன்னபடி, அரைமணி நேரத்தில் அந்த VIP வந்து சேர்ந்தார். சிலரை முதல் முறை பார்த்தவுடன் பிடித்துப் போய் விடும். VIPயும் அந்த வகையைச் சேர்ந்தவர். இதில் ஆச்சிரியம் என்னவென்றால், கோயமுத்தூரைச் சேர்ந்த, முன்னாள் GCT மாணவரான அந்த VIP, கிட்டத்தட்ட 15 வருடங்களூக்குப் பிறகு அன்று தான் GCT வளாகத்தில் காலடி எடுத்து வைக்கிறார் !!! நான் மூன்று வருடங்களுக்கு முன் மேற்கொண்ட GCT பயணம் குறித்து முன்பு நண்பனுக்கொரு மடல் வரைந்திருக்கிறேன்!

VIPயை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். முதல்வருக்கு ஏற்கனவே, VIP குறித்து ஒரு முன்னுரை தந்திருந்தேன் !! என் வேண்டுகோளுக்கு இணங்க, VIP தான் செய்து வரும் தமிழ்ப்பணி பற்றி முதல்வருக்கு அழகாக ஒரு சிறு குறிப்பு வரைந்தார் ! பின்னர், முதல்வருக்கு விடை கொடுத்து விட்டு, VIPயும் நானும் காண்டீன் சென்று சற்று நேரம் அளவளாவிக் கொண்டிருந்தோம். VIP தான் சமீபத்தில் தொடங்கிய தொழில் மற்றும் வடிவமைத்து வரும் product குறித்தும் ஒரு சிறு விளக்கம் தந்தார். VIP மிகவும் interesting-ஆன மனிதர் என்பதை குறிப்பிட விரும்புகிறேன் (அவரும் என்னைப் போலவே ஒரு GCTian இல்லையா :)) !!! அவருடன் நிறைய பேச விரும்பியும், நேரமின்மை காரணமாக முடியவில்லை. VIPக்கு விடை கொடுத்து விட்டு GCTக்கு வந்த வேலையை பார்க்கத் திரும்பினேன்!

ஒரு மாணவரை நேர்முகத் தேர்வு செய்தபோது, அவரை பணிக்கு எடுக்கலாமா வேண்டாமா என்று ஒரு சிறு குழப்பம் எனக்கும் என்னுடன் வந்த மேலாளருக்கும் நிலவியது. நான் அந்த மாணவரிடம் அவர் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வாங்கிய மதிப்பெண்கள் என்னவென்று வினவினேன் . அவர் 1170/1200 என்றவுடன், அவரை உடனே தேர்ந்தெடுத்து விட்டேன் !!! அம்மாணவர் நிச்சயம் கடின உழைப்பாளியாக இருந்திருக்க வேண்டும். எங்கள் நிறுவனத்தில் சேர்ந்த பின், கடின உழைப்பு என்ற ஒன்றை வைத்து, தேவையான பிற தகுதிகளையும் அந்த மாணவர் தனதாக்கிக் கொள்வார் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

சரி, சரி ! VIP மேட்டருக்கு வருகிறேன் ! VIP வேறு யாருமில்லை, "தமிழ்மணம்" காசி தான் ! வலைப்பதிவுலகில் தற்போது நிலவி வரும் சச்சரவுகள்/சர்ச்சைகள் பற்றியும் கொஞ்சம் பேசினோம். அவற்றைப் பற்றி எழுதி எதையும் கிளறுவதாக இல்லை, மன்னிக்கவும் !!!

GCT நினைவுகள் பற்றி சமீபத்தில் எழுதியவை, உங்கள் பார்வைக்கு:
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 1
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 3
GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 4

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, June 25, 2006

என் வலைப்பதிவு குறித்து "Blogthings" கூறியது !

முத்துவின் என்ன கொடுமை சார் இது? பார்த்து விட்டு Blogthings பக்கம் சென்று அங்கு கேட்ட கேள்விகளுக்கு விடையளித்த பின் கிடைத்த, என் வலைப்பதிவு பற்றிய விமர்சனம் கீழே !!! நிஜமாகவே, "கொடுமை" தான் ;-)

Your Blogging Type is Unique and Avant Garde

1. You're a bit ... unusual. And so is your blog.

2. You're impulsive, and you'll often post the first thing that pops in your head.

3.Completely uncensored, you blog tends to shock... even though that's not your intent.

4.You tend to change your blog often, experimenting with new designs and content.



முதல் கருத்து தவறு :(

இரண்டாவது கருத்து ஓரளவு சரி தான் !!!

மூன்றாவது கருத்து அநியாயமானது :((

நான்காவது கருத்து ஓரளவு சரி தான் !!!

நீங்கள் உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன் :)

என்றென்றும் அன்புடன்
பாலா

Saturday, June 24, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 6

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. பல இடத்தில் பிறந்த நதிகள் ஒரு கடலில் வந்து சேரும் ...

2 சித்திரம் பேசும் தத்துவம் ஒன்று, எழுதியவன் எங்கே....

3. கூடியபிறகு குற்றம் காணும் கொள்கையைத் தள்ளுங்கள் ...

4. உன்னை நெஞ்சென்ற மஞ்சத்தில் சந்தித்தேன் ...

5. சிற்றிடை என்பது நூலளவு ...

6. அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ முகமென்று அதற்கொரு தலைநகரோ ...

7. ஒளியாய் தோன்றி நிழல் போல் மறைந்தாள் ...

8. இதை அடுத்தவன் சொன்னா கசக்கும்...

9. இயற்கையும் அவள் மேல் காதல் கொள்ளும் ...

10. கரைந்தோடும் நோய் என்னும் பாவங்களே ...

11. பொங்கும் மகிழ்வுடன் மங்கல நாளில் மங்கையை வாழ்த்த வந்தாரோ...

12. நாணமுன்னு வெட்கமுன்னு நாலுந் தான் இருக்குதுங்க ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா
*************************************

Thursday, June 22, 2006

பெரியார் திரைப்பட சர்ச்சை

இயக்குனர் ஞானராஜசேகரன் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்கவிருப்பதும், அதில் பெரியார் வேடத்தில் சத்யராஜும், மணியம்மையாக நடிக்க குஷ்பூவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாகவும், இத்திரைப்படத்திற்காக திராவிட கழகத்தினர் தமிழ்நாடு முழுதும் நிதி திரட்டுவதாகவும் செய்தி வெளி வந்தது. இதைத் தொடர்ந்து, மணியம்மையாக நடிக்க குஷ்புவுக்கு என்ன தகுதியிருக்கிறது என்றும், அப்பாத்திரத்தில் நடிக்க ஒரு தமிழச்சி நடிக்க ஒரு தமிழச்சி கூடவா கிடைக்கவில்லை என்றும் தி.க வினர் கொதிந்தெழுந்து விட்டனர் !

ஒரு வேடத்தில் நடிப்பதற்கு, ஒருவர் ஓரளவு திறமையும், அனுபவமும் உள்ள நடிக/நடிகையாக இருந்தாலே போதுமானது என்பது பகுத்தறிவாளர்களுக்குக் கூட புரியாமல் போனது ஆச்சரியாமாக இருக்கிறது ! மேலும் அவர் எந்த மொழிக்காரராக இருந்தால் தான் என்ன ? 'பாரதி' திரைப்படத்தில் நடித்த ஷிண்டே மகாராட்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் தானே! தமிழ் தெரியாதவராக இருந்தும் அற்புதமாகவே நடித்திருந்தார்.

மேலும், குஷ்பூ என்ற தனிநபரின் கற்பு குறித்த கருத்துக்கள் தங்களுக்கு உவப்பானதாக இல்லை என்பதற்காக, அவர் மணியம்மையாக நடிப்பதற்கு திகவினர் எதிர்ப்பு தெரிவிப்பது சற்றும் சரியில்லை. குஷ்பூ, பல திரைப்படங்களில் கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்திருப்பதை சுட்டிக்காட்டி கு.திருமாறன் என்ற தி.க. காரர், குஷ்பூவைப் போலத் தான் மணியம்மை இருந்திருப்பாரோ என்ற எண்ணம் இப்போதைய தலமுறையினரிடம் உருவாகி விடுமோ என்ற பதற்றத்தில் தான் திகவினர் ஆவேசப்படுவதாகக் கூறியிருக்கிறார் ! இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு கருத்தா ???? இன்றைய தலைமுறையினர் நிஜத்திற்கும் நிழலுக்கும் வித்தியாசம் கூட தெரியாத அறிவிலிகளா என்ன ??? முதலில், அவரின் இக்கருத்து கண்டனத்துக்குரியது !

குஷ்பூ போலவே, கவர்ச்சி வேடங்களில் நடித்துள்ள மீனா, ரோஜா போன்ற நடிகைகள், சில திரைப்படங்களில் அம்மன் வேடமேற்று நடித்திருக்கின்றனர். இது அம்மன் பக்தர்களை இழிவுபடுத்துவதாக எடுத்துக் கொள்ள முடியுமா ? மேலும் திகவினரை விட மெஜாரிட்டியில் இருக்கும் ஆத்திகர்கள் யாரும் இதற்கு கொதித்தெழுந்ததாக நினைவில்லை ! சத்யராஜ் நாத்திகராக இருப்பதால் பெரியாராக நடிக்க தகுதியானவர் என்று வைத்துக் கொண்டாலும், தனது ஆரம்ப கால திரைப்படங்களில் வில்லனாக, பல கதாநாயகிகளை கற்பழிப்பவராக நடித்திருக்கிறார். எனவே, சத்யராஜ் போலவே பெரியார் இருந்திருப்பாரோ என்று கூறி அவரை எதிர்ப்பது எவ்வளவு அபத்தமானதோ, அது போலத் தான் குஷ்பு மணியம்மையாக நடிப்பதை எதிர்த்து கலாட்டா செய்வதும் கூட !!!

இறுதியாக, இத்தனை ஆண்டுகள் பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை நல்லதொரு திரைப்படமாக எடுக்க பெரியாரின் வழித்தோன்றல்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் பெரிதாக முயற்சி எதுவும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. அவ்வாறு செய்ய முன் வந்த ஞானராஜசேகரனின் (நடிக நடிகையரை தேர்ந்தெடுக்கும்) சுதந்திரத்தில் தலையிட்டு அவரை மிரட்டிப் பணிய வைக்கும் முறையில் இவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்வது எவ்வகையிலும் நியாயமான செயலாகத் தோன்றவில்லை !!!


என்றென்றும் அன்புடன்
பாலா

Monday, June 19, 2006

இடஒதுக்கீடு - உரத்த சிந்தனைகள்

1. IIT களிலும், IIM களிலும் ஆண்டுதோறும் பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் பெரும்பாலோர், முற்பட்ட வகுப்பினரே என்ற நிலைமை, தகுதி (Merit) உடையவர் பலரும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை பறை சாற்றினாலும், தகுதிக்கு, பலமான அடிப்படைக் கல்வி ஒரு முக்கியக்காரணம் இல்லையா ? அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களை தகுதியற்றவர் என்று கூற முடியுமா ? தற்போது படிப்பால் உயர்ந்துள்ள பிற்படுத்தப்பட்டவரில் 75 சதவிகிதத்தினர், பெற்றோர் அல்லது நண்பர்கள் வாயிலாக அறிவு பூர்வமான ஆதரவு எதுவும் கிடைக்கப் பெறாதவரே. அதனால், தரமான அடிப்படைக் கல்வி அனைவருக்கும் கிடைக்க வல்ல சூழலை முதலில் உண்டாக்குவது அவசியமான ஒன்று. இதன் மூலம், பல தரப்பினரும் தகுதி அடிப்படையில் போட்டியிடவல்ல காலம் வரும் வரையில், இடஒதுக்கீடு தேவையான ஒன்றாகவே தோன்றுகிறது.


2. அடுத்து, OBC யில் உள்ள creamy layer தரப்பினரையும், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மக்களையும் இடஒதுக்கீட்டில் சமனாகக் கருதும் வகையில் ஒரு கொள்கையை உருவாக்குவது, சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து, இடஒதுக்கீட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு சுமுகமான சூழல் ஏற்பட பெருமளவு உதவும் என்பது என் தனிப்பட்ட கருத்து.


3. IIT மற்றும் IIM களில் படிப்பவர்களுக்கு எதற்கு சாமானியரின் வரிப்பணத்திலிருந்து அரசு, கல்விக் கட்டணத்தில் மானியம் வழங்க வேண்டும் ? இக்கல்லூரிகளில் பயில்பவர்களில் பெரும்பாலோர் பொருளாதாரச் சூழல் நன்றாக உள்ள குடும்பங்களிலிருந்து வருபவர்கள் தான். நுழைவுத் தேர்வுக்கு நிறைய செலவு செய்து பயிற்சி மேற்கொண்டு தேர்வெழுதுபவர்கள் தான் ! எப்படியும் இக்கல்லூரிகளிலிருந்து பட்டம் பெற்று வெளிவரும் மாணவர்களில் 90 % சதவிகிதம் பேர் அயல்நாடு சென்று விடுகின்றனர். மேலும், படிப்பு முடிந்தவுடன், அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால், தேவையென்றால், படிப்புக்கு கடனுதவி மட்டும் வழங்குவதே சரியானது.

என்றென்றும் அன்புடன்
பாலா

Sunday, June 18, 2006

"தேன்கூட்டில்" ஒரு தேனீயானேன்!

ஜூன் 15 அன்று, 'இன்றைய வலைப்பதிவராக' தேன்கூட்டில் என்னைப் பற்றிய அறிமுகமும், என் வலைப்பதிவு குறித்த சிறு விமர்சனமும் வெளி வந்தன. முதற்கண், தேன்கூடு ஆசிரியர் குழுவுக்கு என் மனமார்ந்த நன்றி !

இதுவரை என் வலைப்பதிவு பற்றி வலையில் வெளிவந்த ஒரு சில குறிப்புகளிலிருந்து இது வித்தியாசமாக அமைந்த ஒன்று ! எனது பல பதிவுகளை வாசித்து, அதன் பின் சுவாரசியமாக எழுதப்பட்ட நல்லதொரு விமர்சனமாக இதைக் கருதுகிறேன். இதனால் என் எழுத்துக்களுக்கு மேலும் பல வாசகர்கள் கிடைப்பார்கள் என நம்புகிறேன். 'தேன்கூட்டில்' ஒரே ஒரு நாள் 'ராணி தேனீ' ஆனது குறித்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் :)

தேன்கூட்டில் வந்த விமர்சனம் கீழே:

கோவை GCT கல்லூரியில் படித்து சென்னையில் பணிபுரியும் இவர், கவிதைகள்,பாசுரங்கள், அரசியல், கிரிக்கெட், திரைப்பாடல்கள், கதைகள் என்று பல துறைகளையும் தொடுபவர்.
[ஆஹா, ஆல்ரவுண்டர் தகுதியை கொடுத்து, பொறுப்பை அதிகம் ஆக்கி விட்டீர்கள் !]

இவரது இடுகைகளில் 'சிறுவயது சிந்தனைகள்', 'பல்லவியும் சரணமும்' போன்றவைஅதிகம் சிலாகிக்கப்பட்டவை.
[இவை எனக்கு நிறைய வாசகர்களை பெற்றுத் தந்தவை, இவற்றால் தான் முதலில் அறியப்பட்டேன்.]

வலைப்பதிவர் தேசிகனால் [இவர் சாதாரணமான ஆளா என்ன ?] அறிமுகப்படுத்தப்பட்ட 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் எழுத்துக்களில் நகைச்சுவை உணர்வும் இழையோடும், ஆத்மார்த்தமான நேசமும் தென்படும்.
[நன்றி]

சுஜாதாவின்எழுத்துக்களை ஆழமாக ரசிப்பவர்.
[ஐயோ, ரவி ஸ்ரீநிவாஸோடு சண்டை வரும் அபாயம் ஏற்பட்டு விடும் போலிருக்கிறதே ;-)]

அவ்வப்போது இவரது தோழர்களுக்கு பகிரங்ககடிதம் எழுதி நினைவலைகளில் மூழ்குபவர்.
[என் ஆத்ம நண்பன் குறித்த பதிவுகளை நினைவு கூர்ந்ததற்கு ஸ்பெஷல் நன்றி!]

வலைப்பதிவுகள் தவிர, திண்ணை, தமிழோவியம்,
அந்திமழை போன்ற இணைய பத்திரிக்கைகளிலும் இவரது படைப்புகள் வெளிவந்திருக்கின்றன.

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் வலைப்பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்றுவரும் 'என்றென்றும் அன்புடன்' பாலாவின் நகைச்சுவை பதிவுகள் பலராலும் ரசிக்கப்படுபவை. இவரது பதிவினைப் பற்றி அவரே எழுதிய இடுகை இது.
[சுயதம்பட்டத்தை சுட்டிக் காட்டி விட்டீர்கள் :)]

என்றென்றும் அன்புடன்,
பாலா

Saturday, June 17, 2006

Reservation குறித்து மூன்று கேள்விகள்

'தலைப்பு' ஊக்கம்: அன்புக்குரிய 'பெனாத்தலார்'

1. பிற்படுத்தப்பட்டவரில், Creamy Layer வகையினர் சிறிய சதவிகிதமே இருக்கையில், அவர்களை 27% உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கி வைப்பதற்கு, சிலர் ஏன் ஆரவார எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ? இதற்கு சுயநலம் தவிர வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா ? கம்யூனிஸ்ட்கள் Creamy layer-ஐ விலக்கி வைப்பதற்கு ஆதரவாக குரல் எழுப்பியது, இது குறித்து மத்திய அரசுக்கு சரியான செய்தியை அனுப்பியிருக்கும் என்று நம்பலாம்.

2. திரு.ராமதாஸ், Creamy Layer-க்கு ஆதரவாக, ஒருவர் நூறு பன்றிகள் வைத்திருந்து, ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதித்தும், அவர் குடும்பத்தில் ஒருவர் கூட படிக்காமல் இருப்பதற்கான சாத்தியத்தை (இந்த வார குமுதம் பேட்டியில்!) எடுத்துக் காட்டி, பொருளாதார அளவுகோல் கூடாது என்கிறார் ! நல்ல உதாரணம் தான் ! இதற்கு எதிர்மறை லாஜிக்கின்படி, பொருளாதார பற்றாக்குறையினால், தகுதியிருந்தும் படிக்க வழியில்லாத முற்படுத்தப்பட்டவருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு சிறு சதவிகிதம் தருவதில் என்ன தவறு ?

3. தொடக்கக் கல்வியில் பிற்படுத்தப்பட்டவருக்கு 25% சதவிகித இடஒதுக்கீடு என்பதை கிடப்பில் போட்டு விட்டு, உயர்கல்வியில் மட்டும் இடஒதுக்கீட்டை அமலுக்கு கொண்டு வரும் இந்த முயற்சி "ஓட்டு வங்கி அரசியல்" அன்றி, வேறென்னவாக இருக்க முடியும் ?

என்றென்றும் அன்புடன்
பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails