இஸ்ரேலுக்கும், லெபனானின் ஹெஸ்பொல்லாவுக்கும் இடையே நடந்து வந்த சண்டை ஓய்ந்து, UN தலையீட்டாலும் (US அனுமதித்ததாலும்!) தற்காலிகமாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பிரச்சினை குறித்து ஒரு பார்வை.
முதலில், இரண்டு ராணுவ வீரர்களை மீட்பதற்காக ஒரு நாடு போர் தொடுப்பது என்பது சற்று அதிகமானது ! மேலும், போரின் முடிவில் இஸ்ரேல் அவர்களை மீட்க முடிந்ததா என்பது தெரியவில்லை ! ஹெஸ்பொல்லாவினால் இஸ்ரேலுக்கு எந்தவித ஆபத்தும் எக்காலத்திலும் ஏற்படக்கூடாது என்று கூறிக் கொண்டு, இஸ்ரேல் நடத்திய குண்டு வீச்சுகள், பல அப்பாவி மக்களையும் குழந்தைகளையும் பலி கொண்டது அமைதி விரும்பும் அனைவரையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கியது.
இதற்கு முன் இஸ்ரேல் நிகழ்த்திய போர்களூக்கு ஓரளவு நியாயமான காரணங்கள் இருந்தன. இப்போது நிச்சயம் கிடையாது ! எப்போதும் போல அமெரிக்கா இஸ்ரேலை ஊக்குவித்து அதில் குளிர் காய்ந்தது. எதேச்சாதிகார புஷ், எதிர்பார்த்தது போலவே, "இது அமைதிக்காக நடத்தப்படும் யுத்தம்" என்று இப்போரை வர்ணித்தார் ! இராக்கில் தங்களால் முழுமையாக செய்ய முடியாததை, லெபனானில் இஸ்ரேலாவது செய்யட்டுமே என்ற அமெரிக்க "நல்லெண்ணமும்" இதற்குக் காரணம் !
நமது இந்திய தொலைக்காட்சி ஊடகங்கள் இப்போர் பற்றிய செய்திகளை பொதுவாக புறக்கணித்ததாகவே தோன்றியது. "Breaking News" என்று போட்டு கவைக்குதவாத செய்திகளை மக்களுக்கு வழங்குவதே இவற்றின் தலையாய பணிகளில் ஒன்று ! செய்திகள் குறித்த ஆய்வு (Analysis) எனபது நடைபெறுவதில்லை. நாமும், கொட்டக் கொட்ட அவற்றைப் பார்க்கிறோம் !
ஹெஸ்பொல்லா நிகழ்த்திய ராக்கெட் தாக்குதல்களில், இஸ்ரேலின் வடக்குப்பகுதியான ஹை·பாவில் பொதுமக்கள் பலியாயினர். இஸ்ரேலுக்கும் இழப்பு தான் என்றாலும், இப்போரினால், இப்போது தான் பொருளாதார நிலை சற்றே சீரடைந்து வரும் லெபனானுக்கு, இழப்பு பலப்பல மடங்கு என்றே கூற வேண்டும். லெபனானின் பன்னாட்டு விமான நிலையம், பெட்ரோலிய ஆலைகள், மின் உற்பத்தி நிலையங்கள் என்று பல இடங்கள் குண்டு வீச்சினால் தரைமட்டமாக்கப்பட்டன.
தம் மக்களுக்கு ஏற்படக்கூடிய அவல நிலையையும், உயிரிழப்புகளையும் கருத்தில் கொண்டாவது, ஹெஸ்பொல்லா சற்று முன்னதாகவே பேச்சு வார்த்தைக்கு வந்திருக்க வேண்டும். ஏன் இப்படிக் கூறுகிறேன் என்றால், அதி நவீன தொழில்நுட்பத் தடவாடங்களின் துணையுடன் வரும் இஸ்ரேலை, ஹெஸ்பொல்லா ராக்கெட்டுகள் கொண்டு எத்ர்த்துப் போரிட்டதால், லெபனானுக்கும், அதன் மக்களுக்கும் ஏற்பட்ட இழப்புகளும், வலியும், மிக மிக அதிகம் ! ஆனால், தீவிரவாதத்தில் நம்பிக்கை வைத்துள்ளவர்களிடம் அவ்வாறு எதிர்பார்க்க முடியாது ! மேலும், இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட அனைவருமே அப்பாவி மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசியல் செய்பவர்கள் தானே !!!
போர் தொடங்குவதற்கு முன், ஹெஸ்பொல்லாவிடம் இருக்கும் ராணுவத் தளவாடங்களை பறிமுதல் செய்யும்படி, லெபனான் நாட்டு ராணுவத்தை இஸ்ரேல் வலியுறுத்தியது உண்மை தான். ஆனால், அவ்வாறு செய்ய முடியாத நிலையில் லெபனான் ராணுவம் இருந்தது / இருக்கிறது என்பதும் உண்மையே ! இஸ்ரேலியத் தாகுதல்களால், லெபனானில், ஹெஸ்பொல்லா எதிர்ப்பாளர்கள் கூட பெருமளவு ஆதரவாளர்களாக மாறி விட்டனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட லெபனான் அரசு தற்போது பலமிழந்து, ஹெஸ்பொல்லா இயக்கம் இன்னும் ஆழமாக வேரூன்றுவதற்கு இப்போர் வழி செய்ததுடன், நிரந்தமான நல்லிணக்கமும், அமைதியும் ஏற்படக் கூடிய சூழலை பல ஆண்டுகளுக்கு பின்னுக்குத் தள்ளி விட்டது ! மிக நிச்சயமாக, இப்போர் இஸ்ரேலுக்கு வெற்றியைத் தரவில்லை ! இதனால் ஏற்படவிருக்கும் பாதகங்கள் தான் அதிகம் !
போர் உச்சத்தில் இருந்தபோது, கோண்டோலீசா ரைஸ் (Condoleezza Rice) இப்பிரச்சினையை, "ஒரு புது மத்திய கிழக்கு பிறக்கும் சமயம் ஏற்படும் பிரசவ வலி" என்று வர்ணித்தார் ! ஆனால், இந்த "புது மத்திய கிழக்கு" (இராக் போலவே!) அமெரிக்க நலத்தை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்ல வல்லதாகவே தோன்றுகிறது !
பி.கு: ராக்கெட் மழை பொழிந்த ஹை·பாவுக்கு (Haifa) 2 ஆண்டுகளுக்கு முன் வேலை நிமித்தம் சென்றிருக்கிறேன். ஆனால், அப்போது சாதா மழை தான் பெய்தது ! கடல் மட்டத்திலிருந்து 5000 அடிக்கு மேல் அமைந்த மலைப்பாங்கான, குளிர்ச்சியான, ரம்யமான ஊர் அது. பஹாயி (Bahaii) சமயத்தின் தலைமையிடமாகவும், பஹாயினரால் புனித பூமியாகவும் ஹை·பா கருதப்படுகிறது. அங்கே, என்னுடன் மிகுந்த நட்புடன் பழகிய இஸ்ரேலிய நண்பர்களும் அவர்களின் குடும்பத்தாரும் நலமாக இருக்கிறார்கள் என்ற செய்தி மிகுந்த ஆறுதலை அளிக்கிறது.
என்றென்றும் அன்புடன்
பாலா